கொடிய நோய் கொரோனா காலத்தில் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு தயங்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடவடிக்கை எடுக்க எந்த தயக்கமும் கூடாது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும் பெரும் சேவை செய்து வரும் நிலையில் ஒரு சில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்தி நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் அரசுக்கு வந்துள்ளன.
அப்பேர்பட்டவர்கள் மீதும் டாக்டர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்து. அப்பேர்பட்ட மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
சில நோயாளிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயிரிழக்க நேரிடுகிறது. அந்த நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களையும், டாக்டர்களையும் தாக்கி விடுகின்றனர்.
இப்பேர்பட்ட சூழ்நிலை வரும் என உணர்ந்து ஊழியர்களுக்கும் டாக்டர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். இல்லையென்றால் டாக்டர்கள், ஊழியர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். சமீப காலமாக இப்பேர்பட்ட சம்பவங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் நடந்துள்ளது.
இதை தவிர்க்க தகுந்த முன்னேற்பாடுகள் அவசியம் தேவை.