fbpx
Homeதலையங்கம்அம்பலத்துக்கு வரட்டும் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம்!

அம்பலத்துக்கு வரட்டும் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம்!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் எனக் கூறியது. அதேபோல லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதின் பேரில் பல ஊழல்கள் வெளிவந்தது. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது வழக்குகள் குவிந்துள்ளன.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர்செல்வம்,- எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கொடுத்தால் 41 ஆயிரம் கோடி ரூபாய் எனும் அந்த ரகசியத்தை நான் விரைவில் வெளியிடுவேன்.

அப்போது வெட்ட வெளிச்சமாக பல உண்மைகள் இந்த நாட்டு மக்களுக்கு தெரிய வரும் என்று அதிரடியாகத் தெரிவித்திருந்தார். இவரின் இந்த பேட்டியை, ‘எடப்பாடி பழனிசாமி 41 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் பணம் எல்லாம் யாருடையது, எதற்கு பயன்பட்டது? என்ற பாணியில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இது குறித்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை கட்டாயம் வெளியிட வேண்டும்.

இவ்வளவு பெரிய தொகை யாருடையது? அந்தத் தொகைக்கு என்று ஏதேனும் கணக்கு உள்ளதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

புகாரைச் சொல்லி இருப்பவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். பொறுப்பில்லாமல் எதையும் சொல்ல மாட்டார். எனவே இந்த விவகாரத்தில் உண்மை வெளிப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனை தமிழக அரசு கிடப்பில் போடாமல் இந்த 41,000 கோடி ரகசியத்தை வெளிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் அம்பலத்துக்கு வரவேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img