fbpx
Homeதலையங்கம்குழந்தை திருமணத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள்!

குழந்தை திருமணத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள்!

கடலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடந்தேறி வந்திருக்கின்றன.
சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சோமசேகர் தீட்சிதர். இவர் நடராஜர் கோவில் தீட்சிதர்களில் ஒருவர்.

இவரது 14 வயது மகள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நடராஜர் கோவில் தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

விசாரணையில் அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒத்துக் கொண்டார். அதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (41), சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் (24), மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர்(42) ஆகியோரை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், தீட்சிதர்கள் இன்னொரு குழந்தை திருமணத்தை நடத்திவைத்தது அம்பலமானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 வயது குழந்தைக்கு 19 வயது தீட்சிதரை திருமணம் செய்துகொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில் பத்ரீசன் எனும் தீட்சிதர், அவரது தந்தை ரத்தினம், மணமகனின் சகோதரர் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜகணேஷ் தீட்சிதர், தாய் தங்கம்மாள் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் தங்கம்மாளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு குழந்தை திருமணப் புகாரில் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், வினோபால தீட்சிதர், வினோபால தீட்சதரின் மகன் ஆகியோரை தற்போது கடலூர் டெல்டா படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோல், 10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தீட்சிதர்கள் நடத்தி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீட்சிதர்களே குழந்தைகளைத் திருமணம் செய்திருப்பது தான் மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படிக் குழந்தைகளை மணப்பதற்கு, இறைவனுக்கு கைங்கர்யம் செய்யும் தீட்சிதர்கள் எப்படி துணிந்தார்கள்? அந்த அதிகாரத்தை அவர்களே கையிலெடுத்து வேலியே பயிரை மேய்ந்தது போல நடந்து கொண்டது மிகமிக கண்டிக்கத்தக்கது.

சிதம்பரத்தில் அடிப்படை ஆதாரங்கள் கூட இல்லாமல் குழந்தைத் திருமணங்களை தீட்சிதர்கள் நடத்தி வைத்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல; பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு பரிசீலித்து வரும் நிலையில், இது கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதால் காவல்துறை தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.

இந்த புகாரில் சிக்கிய தீட்சிதர்கள் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தில் பணிபுரிந்தால் அவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்.

குழந்தைத் திருமணம் நடத்தி வைப்பதோ குழந்தைகளை மணப்பதோ இனி ஒருபோதும் நடக்கக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img