9 குழந்தைகள் பெற்று சாதனை படைத்திருந்த மாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் கின்னஸ் சாதனையை முறியடித்து, 10 குழந்தைகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் தென் ஆப்பிக்க நாட்டைச் சேர்ந்த பெண்.
கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டெபோகோ சொடேட்ஸி& கோஸியாமே தமாரா தம்பதி. 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 6 வயதில் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். 37 வயதான கோஸியாமே தமாரா, மீண்டும் கர்ப்பம் தரித்தார்.
ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கர்ப்பப்பையில் 8 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் தம்பதியினர் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
இருந்தபோதிலும், 8 குழந்தைகளும் எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறக்க வேண்டுமே என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.
இந்நிலையில் கோஸியாமேவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்தார். இதில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் ஆவர். தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
இதற்கு முன்பாக மாலி நாட்டை சேர்ந்த பெண் கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்று கின்னஸ் சாதனை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை கோஸியாமே முறியடித்து 10 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 10 குழந்தைகளையும் சந்தோஷமாக தாமே வளர்க்கப்போவதாக கோஸியாமே தெரிவித்துள்ளார்.