சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தனது தள்ளாத வயதிலும் யோகா செய்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் மறைந்த நானம்மாள் பாட்டி. கோவையை சேர்ந்த இவரது மகள் வழி கொள்ளுப் பேத்தி கனித்ரா.
ஏழு வயதான இந்த சிறுமி தனது தாயாரும் நானம்மாள் பாட்டியின் பேத்தியுமான மதனிகா நடத்தி வரும் யோகா பயிற்சியை கூர்ந்து கவனித்ததில், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே யோகா கலையை கற்க துவங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது ஏழு வயதான சிறுமி கனித்ரா, கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பேக்வார்டு பிரிவு யோகாவில் முதலிடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச யோகா தினமான நேற்று அனைவருக்கும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது வீட்டிலேயே கண்டபேராண்டாசனம், பூர்ணகலாபசானம், திருவிக்ரமாசனம் போன்ற ஆசனங்களை செய்து அசத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், உலக அளவில் நமது பாரம்பரிய யோகாவின் பெருமையை கொண்டு சேர்க்கும் விதமாக யோகா செய்வதாக குறிப்பிட்டார். யோகா செய்தால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்றும் கூறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.