fbpx
Homeபிற செய்திகள்‘போலீஸ் அக்கா’ திட்டம்: கோவை மாநகரில் அறிமுகம்

‘போலீஸ் அக்கா’ திட்டம்: கோவை மாநகரில் அறிமுகம்

கோவை மாநகரக் காவல்துறை சார்பில் மாணவிகளின் உளவியல், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை மாநகரக் காவல் துறை சார்பில் மக்களைப் பாதுகாக்க பல்வேறு புதிய முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ‘போலீஸ் அக்கா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக காவல் துறையில் முன்மாதிரி திட்டமாக ‘போலீஸ் அக்கா’ என்ற புதிய திட்டத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கியுள்ளார்.

இதில், அனைத்துக் கல்லூரிகளுக் கும் ஒரு மகளிர் காவலர், தொடர்பு அலுவலராக நியமிக்கப்ட்டு மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பது, கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு, அவர்கள் தரும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் அந்தப் பெண் காவலர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இதில், காவல் துணை ஆணையர் சுஹாசினி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், கோவை மாநகரில் உள்ள 60 கல்லூரிகளின் நிர்வாகிகள், போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற உள்ள 37 பெண் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img