fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ இதுவரை 81 அரசுப் பள்ளிகளில் பசியாறுவோர் 5633 பேர்

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ இதுவரை 81 அரசுப் பள்ளிகளில் பசியாறுவோர் 5633 பேர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் 40 பள்ளிகளில் 2928 மாணவ, மாணவிகளுக்கும், துறையூர் ஒன்றியத்தில் உள்ள 41 பள்ளிகளில் 2705 மாணவ, மாணவிகளுக்கும் என 5633 மாணவர்களுக்கு ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்’ உணவு வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது கூடுதலாக 1488 பள்ளிகளில் பயிலும் 1,96,733 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், குடும்பச்சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை.

இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை நேரத்தில் உணவு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிவித்து 15.09.2022 மதுரையில் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், துறையூர் ஊராட்சி ஒன்றியம், நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 16.09.2022 அன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார்.

குறிக்கோள்
ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

கற்றல் திறன் அதிகரிப்பு
பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளில் வாரந்தோறும் திங்கள்கிழமை ரவா உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கலுடன் காய்கறிச் சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா கேசரியுடன் சேமியா காய்கறி கிச்சடி ஆகியவை வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிருவாகத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களைக் கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்ததாவது:
ஒரு சிறப்புத் திட்டமாக, இந்தியாவிற்கே முன்மாதிரியாக, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவினை உண்டு கல்வி பயில்கின்ற வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளதை மக்கள் பாராட்டி வரவேற்கின்றனர்.

மாவட்டத்தில், முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் 40 பள்ளிகளிலும் துறையூர் ஒன்றியத்தில் 41 பள்ளி களிலும் என மொத்தம் 81 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் 40 பள்ளிகளில் 2928 மாணவ, மாணவிகளுக்கும், துறையூர் ஒன்றியத்தில் உள்ள 41 பள்ளிகளில் 2705 மாணவ, மாணவிகளுக்கும் என 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 5633 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த சமையல்கூடம் அமைக்கப்பட்டு வெளி ஆதாரமுறையில் (Outsourcing) காலை உணவு தயாரிக்கப்பட்டு 2928 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் அங்குள்ள சத்துணவு மையங்களில் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரால் காலை உணவு தயாரிக்கப்பட்டு 2705 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது கூடுதலாக 1488 பள்ளிகளில் பயிலும் 1,96,733 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

“ஊட்டச்சத்து உணவால் மகிழ்ச்சி”
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பச்சமலைப் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியின் பெற்றோர் பழனிமுருகன் தெரிவித்ததாவது:
பழங்குடியின மக்களாகிய நாங்கள் துறையூர் ஊராட்சி ஒன்றியம், பச்சமலையில் உள்ள தோனூர் கிராமத்தில் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகன் தர்னிஷ்குமார் ஐந்தாம் வகுப்பும், மகள் ஜனனி முதல் வகுப்பும் கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

உண்மையாகவே இந்த காலை உணவுத் திட்டமானது எங்களுடைய குழந்தைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
குழந்தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும்போது அவசர அவசரமாக ஏதேனும் இருப்பதை சாப்பிடக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்போம்.

சில நேரங்களில் காலை உணவு சாப்பிடாமலே குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவினை கொடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடங்களையும் நல்ல முறையில் கவனித்து படிக்கிறார்கள்.

இந்த திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு குடும்பத்தின் சார்பாகவும், பச்சமலை வாழ் பழங்குடியின மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

“பசி தீர்ந்தது உற்சாகம் வந்தது”
திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி முகிதா ஸ்ரீ வர்ஷா தெரிவித்ததாவது:
தங்கை முகில் யாழினி இதே பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறார். தந்தை ஹோட்டலில் வேலை செய்வதால், காலையிலேயே வேலைக்குச் சென்று விடுவார்.

அம்மா கைக்குழந்தையான எனது தம்பியை கவனித்துக் கொள்வதால் காலை உணவு சாப்பிட்டு பள்ளிக்கு வருவது கஷ்டமாக இருந்தது. சில நேரங்களில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால் பாடத்தை கவனிப்பது சிரமமாக இருந்தது.

இப்போது முதல்வர் தந்த காலை உணவுத் திட்டத்தில் உணவு சாப்பிடுவதால் பசி தீர்ந்து உள்ளம் உற்சாகமாக இருக்கிறது. இதனால் நானும், தங்கையும் படிப்பில் கவனம் செலுத்தி படிக்க முடிகிறது. முதல்வருக்கு ரொம்ப நன்றி தெரிவிச்சிக்கிறோம் என்றார்.

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மாணவ, மாணவிகளுக்கு பசியைத் தீர்ப்பதுடன், உற்சாகமாக கல்வி பயிலவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டு ள்ளது. மாணவ, மாணவிகளுடைய பெற்றோர் மட்டும் அல்லாது பொது மக்களும் இத்திட்டத்தினை வழங்கிய முதல்வரை பெரிதும் பாராட்டுகின்றனர்.

தொகுப்பு:
த.செந்தில் குமார்,
உதவி இயக்குநர்,
செய்திமக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img