fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி தாவரவியல் பூங்காவில் 10 ஆயிரம் தொட்டிகளில் பூத்துகுலுங்கும் மலர்செடிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 10 ஆயிரம் தொட்டிகளில் பூத்துகுலுங்கும் மலர்செடிகள்

ஊட்டி, 2-ம் பருவ சீசனை முன்னிட்டு, ஊட்டியில் அரசினர் தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், மலர்க் காட்சி மாடத்தில் மலர்த் தொட்டிகளை அடுக்கும் பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, உதவி இயக்குநர் பாலசுந்தரம், மேலாளர்கள் இலக்கியா, கவின்யா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:- ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு 2-ம் பருவத்தினை முன்னிட்டு, பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான 4 லட்சம் மலர்ச்செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூக்கள் மலர்ந்து காட்சி அளிக்கிறது.

கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற வெளி மாநிலங்களிலிருந்து விதைகள் பெறப்பட்டு டேலியா, சால்வியா, இன்கோ மெரிகோல்டு, பிரெஞ்ச் மெரிகோல்டு, பிகோனியா, டெய்சி, கேலண்டூலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்ளிட்ட ரகங்களில் 10,000 மலர்த் தொட்டிகள் மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம் 2,000 மலர்த்தொட்டிகளால் மலர்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரணி இல்லம் அமைந்துள்ள புல்வெளி மைதானத்தில் மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 5,000 மலர்த்தொட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மலர்க்காட்சி திடல் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதத்துக்கு காட்சிப் படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img