fbpx
Homeபிற செய்திகள்மழை தண்ணீர் தேக்கத்துக்கு பிறந்தது விடிவு

மழை தண்ணீர் தேக்கத்துக்கு பிறந்தது விடிவு

கோவையில் மேம்பாலங்களுக்கு கீழே தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்த நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் தொடர் கனமழை பெய்தது. 

இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சாலைகளின் நிலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மழை வரும்போதெல்லாம் கோவையில் லங்காகார்னர் ரயில்வே மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கும்.

தண்ணீரில் மிதந்தபடி சென்று விடலாம் என்று எண்ணி அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்து பழுதாகி நிற்கும் நிலை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது.

இதற்கு மாநகராட்சி தரப்பில் வெவ்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டும் பயனில்லாமல் இருந்து வந்தது. இதனிடையே மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இந்த பணிகள் முடுக்கிவிட்டார்.

எந்த நேரத்தில் மழை நீர் தேங்கிய தகவல் கிடைத்தாலும், அங்கு சென்று மழை நீரை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்தார். 

வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன; மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தப்பட்டன. ராட்சத மின் மோட்டார்கள் கொண்டு மழை நீர் அகற்றப்படுகின்றன. லங்காகார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது.

இதனால் நேற்று மாலை நகரில் கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை. இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img