fbpx
Homeபிற செய்திகள்அதிகளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்- மரம் நடும் விழாவில் திருவண்ணாமலை கலெக்டர்...

அதிகளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்- மரம் நடும் விழாவில் திருவண்ணாமலை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் பேச்சு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ் கர பாண்டியன், இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் வனத்துறை சார்பாக தமிழ்நாட்டின் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்திட தமிழ்நாடு பசுமை இயக்கம் 2024&25 ஆண்டின் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டின் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்திட தமிழ்நாடு பசுமை இயக்கம் 2024 -25 ஆண்டின் மரக்கன்றுகள் நடும் விழா இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது.

பொதுவாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள் உள்ளன. இந்த ஐவகை நிலங்களிலிருந்து தான் மனித வாழ்க்கை முறை தொடங்கியது.

நிலவகைகளுக்கு ஏற்றவாறு மரங்கள் நடப்பட்டு, அது வளர்கின்றது என்ற கருத்தானது உலகிலேயே முதன்முதலாக தமிழர்கள் தான் கடைபிடித்தார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிற் கும் உகந்த நாட்டு மரங்களை தான் நட வேண்டும்.

நம் நாட்டு மரங்களை வளர்க்கின்ற பொழுது நம் நாட்டிற்கு உகந்த தகவமைப்பிற்கு ஏற்றவாறு மரங்கள் வளரும். நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு ஏற்ற பழங்களும், காய்கறிகளும் கிடைக்கும். அந்தந்த பகுதிகளில் விளைகின்ற பொருட்களை சாப்பிட வேண்டும். நம் பகுதிகளில் என்னென்ன பழங்கள், காய்கறிகள் உள்ளனவோ அதை கண்டிப்பாக உண்ண வேண்டும்.

மரங்கள் என்று குறிப்பிடும் பொழுது நாம் காடுகளில் தான் வாழ்ந்தோம். காடுகள் என்று நினைக்கின்ற பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. நம் முன்னோர்கள் அனை வரும் காடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள்.

அத்தகைய காடுகளில் மரங்களை ஏன் அழிக்கின்றோம், அவ்வாறு அழிக்கின்ற பொழுது அதற்கு ஈடாக எத்தனை மரங்களை நடுகின்றோம், இருக்கின்ற இடங்களில் மரங்கள் நட்டு வைக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கின்றோம் என்று நினைக்கின்ற பொழுது நாம் எந்த அளவிற்கு இயற்கையை விட்டு வந்திருக்கிறோம் என்பது சரியாக புரியும். எனவே நாம் மரங்களை அதிகமாக நட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் இன்றையதினம் 1000 மரக்கன்றுகள் நட்டு இருக் கின்றோம். நமது பங்களிப்பை அளிக்கின்ற வகையில் பிறந்த நாள் மற்றும் பல்வேறு விழாக்களில் மரக்கன்றுகளை நட நாம் அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக பழ மரங்களை வீட்டிற்கு வெளிப்பகுதியில் நட வேண்டும்.

அவ்வாறு நடுகின்ற பொழுது மனிதர்களுக்கு மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள் போன்றவைக்கும் பயனுள்ளவையாக அமையும். மரங்களை நடுகின்ற பொழுது காடுகள் அழகுற அமையும், வெப்பநிலை குறையும், பனிப் பாறை உருகுதல் போன்ற விளைவுகள் ஏற்படாது.

எனவே அனைவரும் இயற்கையை பாது காக்க ஒன்றுபட்டு செயல் படுவோம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க், உட்பட திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலை வாணி கலைமணி, வனத் துறை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு பசுமை இயக்கம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பசுமை போர்வையை அதிகரிக்கும் பொருட்டு 9,26,659 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img