fbpx
Homeபிற செய்திகள்தமிழக மீனவர்கள் கோரிக்கை: செவிசாய்க்குமா மத்திய அரசு?

தமிழக மீனவர்கள் கோரிக்கை: செவிசாய்க்குமா மத்திய அரசு?

உலகின் இரண்டாவது பெரிய இராணுவப்படை கொண்ட நாடு இந்தியா. 8ஆவது பெரிய கடற்படை கொண்ட நாடு இந்தியா. இந்திய பாதுகாப்புத்துறைக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.6.21 இலட்சம் கோடி ஒன்றிய அரசால் செலவு செய்யப்படுகிறது.
எனினும், அண்டை நாடுகளிடமிருந்து இந்திய மக்களை காப்பதில் முழு கவனம் செலுத்துகிறதா மத்திய அரசு என்றால், அது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவ மக்களுக்கு, இலங்கை கடற்படையாலும், இலங்கை கடற்கொள்ளையர்களாலும் முன்னெடுக்கப்படும் சிக்கல்கள் தொடர்ந்து வருகிறது என்பதை விட, அதிகரித்துள்ளது என்பதே, இலங்கை கடற்படையின் அண்மை நடவடிக்கைகள் உணர்த்துவதாய் அமைந்துள்ளன.

2014ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் சந்தித்து வரும் எல்லைச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நரேந்திர மோடி பிரச்சாரக் குரல் எழுப்பி, 11 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது.

எனினும், அது பிரச்சாரக் குரலுடன் நின்றுவிட்டதே தவிர, நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடல் எல்லைகடந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால், செப்டம்பர் 21ஆம் நாள் ராமேசுவரம் மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மீனவர்கள் மீது ஒப்புக்கொள்ளாத வகையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ராமேசுவரம் மீனவர்கள் கூட்டாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்து, இன்று இரண்டாவது நாளாக, உண்ணாவிரதத்துடனான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் வேதனைக்குரல் தினமும் பல்வேறு விதமாக மத்திய அரசின் காதில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது.

இனியும் தாமதம் செய்யாமல் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மீனவர்களின் தலையாய கோரிக்கை – செவி சாய்க்குமா மத்திய அரசு?

படிக்க வேண்டும்

spot_img