fbpx
Homeபிற செய்திகள்அதிகரிக்கும் ரயில் விபத்துகள்!

அதிகரிக்கும் ரயில் விபத்துகள்!

கடந்த வருடம் ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. இந்த ரயில்கள் மீது எதிர் திசையில் வந்தஹவுரா அதிவிரைவு ரயிலும் மோதிய கோர விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர். 1000 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தை அடுத்து, இந்திய ரயில்வே துறை பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது, மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்கப்படும் என ரயில்வே துறையால் கூறப்பட்டது. ஆனாலும், ரயில் விபத்துகளை ரயில்வே துறையால் முழுதாக தடுக்க முடியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு கூட, சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டை இடையே சரக்கு ரயில் மீது மைசூரு வாராந்திர பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த ரயில் விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், 19 பேர் காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த வருடம் மட்டும் ஹைதராபாத், டெல்லி, தெலுங்கானா , ஜார்கண்ட், உத்திர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் சில விபத்துகளில் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி, பிப்ரவரி 17ஆம் தேதி, மார்ச் 5ஆம் தேதி, ஜூன் 17ஆம் தேதி, ஜூலை 18ஆம் தேதி, ஜூலை 30ஆம் தேதி என இந்த ஆண்டில் இதுவரை ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த தொடர் விபத்துகள் நாட்டில் கவலை தரும் விஷயமாக மாறி உள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மைசூரு & தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என்றும் பல விபத்துகளில், பல உயிர்கள் பறிக்கொடுக்கப்பட்டாலும் மத்திய அரசு எந்த பாடமும் கற்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

பல்வேறு சமயங்களில் சிக்னல் கோளாறு என தொழில்நுட்பத்தையே ரயில்வே துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரயில்வே தண்டவாள பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

ரயில்வே தொழில்நுட்பத்தை மேம்படுத்தி விபத்துகளை குறைத்து , பயமில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசிடம் அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது!

படிக்க வேண்டும்

spot_img