தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தர்மபுரி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் தர்மபுரி அடுத்த பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் பி. தர்மசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாக இயக்குனரும், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவில் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார். மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தனித்தனியாக முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ. 15,000, மூன்றாம் பரிசாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.