நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த உள்ள குருசாமிபாளையம் பகுதியில் நெசவாளர்கள், விசைத்தறியாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும்.
இப்பகுதியில் உள்ள அருள்மிகு சிவசுப்ரமணியர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இந்து -முஸ்லீம் சமுதாய மக்கள் ஒன்றுகூடி, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
இதன்படி, இந்த ஆண்டு இக்கோவிலின் தேர்திருவிழா வழக்கம்போல், கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்து முஸ்லீம்கள் ஒன்று திரண்டு சந்தனம் பூசிக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, குருசாமிபாளையம் ஊர் பெரிய தனக்காரர் தியாகராஜன், இராசிபுரம் கிழக்குத் தெரு பள்ளிவாசல் தலைவர் உசேன் ஆகியோர் தலைமையில், சந்தனம் பூசும் விழா நடைபெற்றது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரத்தடியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து, கொடிமரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி எல்லோரும் நலமாக இருக்க துவா ஓதி பிரார்த்தனை செய்தனர்.
தேங்காய் பழம், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை பிரசா தங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதனையடுத்து, இரு தரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவர் பூமாலை மாற்றிக்கொண்டு, ஆரத்தழுவி சந்தனம் பூசிக் கொண்டதுடன், கடைகள் மற்றும் வீடுகள்தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்து-&முஸ்லீம் பெரு மக்கள் இணைந்து சந்தனம் பூசி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததுடன், மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாய் இருந்தது.
இந்தக் கிராமத்தில் கோடை காலத்தில், ஏற்படும் கொள்ளை சம்பவம் ,நோய்களை தடுக்கும் வகையில், இரு மதத்தினரும் இணைந்து நடத்தும் சந்தனம் பூசும் விழா 152 ஆண்டுகாலமாக நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.