குடும்பத்தையும் தொழிலையும் சமமாக நடத்தினால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பேசினார்.
ஈரோடு பழையபாளையம் சத்தி துரைசாமி திருமண மண்டபத்தில் சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். சக்தி தேவி அறக்கட்டளை அறங்காவலர்கள் டாக்டர் துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி, ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பங்கேற்று, 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை, 2 செட் சீருடை வழங்கினார். நிகழ்ச்சியில் வெ.இறையன்பு பேசியதாவது:
ஒரு மாநிலத்தின் முகமாக இருப்பது ஆட்டோ ஓட்டுநர்கள் தான். ரயில், விமான நிலையங்களில் பயணிகள் முதலில் சந்திப்பது ஆட்டோ ஓட்டுநர்களை தான். ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்களோ, அதை வைத்து தான் அந்த மாநிலத்தின் பிம்பம் ஏற்படும்.
இதன்பேரில், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா நட்பு வாகனம் திட்டத்தை துவக்கினோம். இந்த வாகனங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தது. அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களை நலவாரியத்தில் இணைத்தோம். ஈரோடு மாவட்டத்திலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்கள் தாங்கள் மட்டுமின்றி, ஆட்டோவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பயணிகளிடம் அன்பாகவும், மரியாதையாகவும், உதவிகரமாகவும் இருக்க வேண்டும்.
நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சகல நேரமும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை விட்டுவிடக்கூடாது. குடும்பத்தையும், தொழிலையும் சம தன்மையோடு நடத்தினால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
சேமிக்கும் பழக்கத்தை துவங்குங்கள். தீய பழக்கங்களை கைவிட்டு விடுங்கள். இருந்தால், அதில் இருந்து மீள மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று கைவிட முயற்சி செய்யுங்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 100 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கி, திறன் பயிற்சி அளிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வெ.இறையன்பு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்திதேவி அறக்கட்டளை அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.