கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா நேற்று (28ம் தேதி) அன்று காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்பகவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கான்பூர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் முனைவர் நச்சிகேதாதிவாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் நாகரிகத்திற்குப் பின்பும் ஒவ்வொரு அடிப்படை உண்டு என்றும் ஐரோப்பிய நாடுகள் மொழியையும் மத்திய கிழக்கு நாடுகள் மதத்தையும் ஆப்பிரிக்க நாடுகள் பழங்குடியின பண்புகளையும் தம் நாகரிகத்தின் அடிப்படையாகக் கொண்டன என்றும் குறிப்பிட்டார்.
பாரத நாட்டின் நாகரிகத்தின் செழுமைக்கு மொழி, மதம், உணவு, இனம் ஆகியன அடிப்படைகளாக அமைய வில்லை என்றும் பாரத நாகரிகம் அறிவை அடித்தளமாகக் கொண்டது என்றும் இங்கு தோன்றிய இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய அனைத்து மதங்களும் அறிவின் அடிப்படையில் தோன்றியவை என்றும் வலியுறுத்தினார். பாரத் என்பதில் பா என்பதற்கு அறிவு என்றும் ரத் என்றால் அதனைப் பெறுபவன் என்றும் பொருள்கூறி, அனைத்துத் துறைகளிலும் உலகிற்கு அறிவைத் தருகின்ற நாடாக நம்நாடு விளங்குகின்றது. இந்தஅறிவைக் கண்டறிய பிரமாணங்கள் துணை செய்கின்றன” என்றும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாகக் கல்லூரியின் மாணவர் பேரவைத்தலைவர் ஏ.அனில்குமார் வரவேற்புரையாற்றினார்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர் களுக்குச் சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர் பேரவையின் செயலர் வி.தர்ஷினி நன்றியுரையாற்றினார். விழாவின் நிறைவில் மாணாக்கர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.