ஒமிக்ரான் வைரஸின் துணைதிரிபான ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று, நம் நாட்டில் முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்டது. தற்போது 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 196 பேரிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புள்ளிவிவரப்படி கேரளா (83), கோவா (51), குஜராத் (34), கர்நாடகா (8), மகாராஷ்டிரா (7), ராஜஸ்தான் (5), தமிழ்நாடு (4), தெலங்கானா (2), ஒடிசா (1), டெல்லி (1) ஆகியவை ஜேஎன்1 வகை கொரோனா பட்டியலில் உள்ளன. இப்பட்டியலில் ஒடிசா புதிதாக இணைந்துள்ளது.
இன்சாகாக் புள்ளிவிவரப்படி நவம்பரில் 17 பேரிடமும் டிசம்பரில் 179 பேரிடமும் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வகை வைரஸை மிக வேகமாகப் பரவும் தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்திய வாரங்களில் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
நம் நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் வேளையில், ஜேஎன்.1 வகை தொற்று குறித்து மாநிலங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் இருவர், தமிழ்நாட்டில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி வரை தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் குறைந்திருந்தது.
ஆனால் கொரோனா புதிய திரிபு மற்றும் குளிர்காலம் வந்த பிறகு தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஒன்றிய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகளவில் ஜேஎன்.1 வகை தொற்று பரவி உள்ளது.
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!