சென்னையின் பிரபல மருத்துவமனை யான ரேலா மருத்துவமனை மற்றும் WCCG சென்னை சைக்கிளிஸ்ட்ஸ் என்ற சென்னை மாநகரைச் சேர்ந்த சைக்கிளிங் குழுவும் ஒருங்கிணைந்து ரேலா டெனா சிட்டி 110K
சைக்ளோத்தான் என்ற நிகழ்வை நடத்தின.
சென்னையின் குரோம்பேட்டையில் ரேலா மருத்துவமனை வளாகத்திலிருந்து காலை 5.30 மணிக்கு ஆரம்பமான 110 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த சைக்கிள் பயணத்தில் 500-க்கும் அதிகமான சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர்.
தாம்பரம், பெருங்களத்தூர், படப்பை, ஒரகடம், திருக்கச்சூர், பாலூர், பழைய சீவாரம், எழிச்சூர், தெரசாபுரம், குளத் தூர், மணிமங்கலம்,முடிச்சூர் வழியாக பயணித்த இந்த சைக்ளோத்தான் நிகழ்வு திரும்பவும் ரேலா மருத்துவமனை வளாகத்தில் வந்து சேர்ந்ததுடன் நிறை வடைந்தது.
ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி, சைக்ளோத்தான்-ஐ துவக்கி வைத்தார்.
நிறைவில் அவர் பேசியதாவது:
சைக்கிளிங் செய்வது மற்றும் உறுப்பு தானம் அளிப்பது என்ற இரண்டு விஷயங்களுக்கும் அடிப்படையான மதிப்பீடுகளாக இருப்பவை ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றம். இந்த மூன்று அம்சங்களின் ஒருங்கிணைந்த சாரத்தை இன்று நிகழும் ரேலா டெனாசிட்டி 110K சைக்ளோத்தான் நிகழ்வு உள்ளடக்கியதாக நடத்தப்படுகிறது.
எமது மருத்துவமனையில் மட்டும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக 193 நபர்களும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைக்காக 114 நபர்களும் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் 156 உறுப்பு தான நிகழ்வுகளே நடைபெற்றிருக்கின்றன என்றார்.
உறுப்பு தானம் அளித்த நபர்களுள் சிலர், மிக இள வயதினர். 12 வயதே நிரம்பிய சிறுவன் மற்றும் 21 வயது இளைஞன் உயிரிழந்தபோதிலும் உறுப்பு தானத்தின் வழியாக தங்களது வாழ்நாளுக்குப் பிறகும் பலருக்கு வாழ்க்கை என்ற அரிய வெகுமதியை வழங்கிச் சென்றிருக்கின்றனர்.