ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் “ஆஸ்ட்ரானமி” என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி இருதினங்கள் நடைபெற்றது. விழாவினைத் தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) சிதம்பரநாதன் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் அப்துல்கலாமின் மாணவர்கள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். மேலும் விழாவிற்குப் பள்ளித் தலைவர் பாலு, பள்ளிச் செயலர் பிரேம்சுந்தர், பள்ளித்தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி தலைவர் பாலசுப்பிரமணியன் ரோட்டரி செயலர் ராமசுப்பு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் மொத்தம் 295 பேர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விளக்கக்காட்சி, மொபைல் ரோபோக்கள் ஆகிய பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
பல்வேறு மன்றத்தின் சார்பாக நிலையான வளர்ச்சி இலக்குகள் என்ற தலைப்பில் செயல்பாடுகள் மூலம் விளக்கியது மிகவும் அழகுற அமைந்தது. மாணவர்களின் பல்வேறு ஓவியங்களும் கைவினைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட ரோட்டரி கவர்னர் தினேஷ்பாபு மற்றும் மாவட்ட துணைரோட்டரி கவர்னர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.