திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்பாஸ்கர பாண்டியன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் உயர்கல்வி பயிலுவதற்கான அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகள் நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்கள் பயன்பெ றும் வகையில் இத்திறன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் முன்னணி நிறுவனங்களில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
மேலும் பயிற்சி பெறும் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டுகிறது. இத்திட்டத்தில் சேருவதற்கு Skill Wallet என்ற பிரத்தியேக கைபேசி செயலி (Mobile App) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 2023-24 ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 12 ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.