தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200வது பிரிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும்போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. 2வது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா வேறுபட்டால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்“ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரே வேந்தராக செயல்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தொடர்ந்து, இந்த சட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று (16ம் தேதி) மாலை சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கப் போகிறது.
வரலாற்றில் முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அதுவும் பல்வேறு அம்சங்களிலும் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வரும் தமிழ்நாட்டில் இக்கூட்டம் நடப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய துணைவேந்தர்கள் நியமனம் குறித்துகூட விவாதிக்கப்படலாம். தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாத, திறமையானவர்களையே துணைவேந்தர் பதவிகளில் நியமிக்க வேண்டும் என்ற கல்வியாளர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றி உயர்கல்வி வளர்ச்சியிலும் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்திரை பதிப்பார் என்பதில் சந்தேகமில்லை!