திருச்சி மாவட்டம் -பூவாளூர் அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில், இ- காணிக்கை செலுத்தும் வசதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் இன்று (மார்ச் 18) துவங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு பல்வேறு நடைமுறைகள் வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பூவாளூரில் உள்ள அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் கூட்ட நெரிசலின் போது, பொது மக்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இ-காணிக்கை வசதியை கோயில் நிர்வாக அலுவலர் கார்த்திகா துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி முதன்மை மண்டல மேலாளர் ஜி.ஸ்ரீராம் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பூவாளூர் கிளை மேலாளர் ஏ.செந்தில் குமார் மற்றும் வங்கி அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இ-காணிக்கை சேவையின் துவக்கமாக, பக்தர்கள் அனைவரும் கியூஆர் கோட்-ஐ பயன்படுத்தி காணிக்கை செலுத்தினர்.