fbpx
Homeதலையங்கம்உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள்!

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள்!

கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மிக உக்ரமாக இருக்கிறது. தலைநகர் கீவ் அநேகமாக கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த போர் எந்த நேரத்திலும் முடிவுக்கு வந்துவிடும் என்பது ஆறுதலாக இருக்கிறது.

ரஷ்யா அருகில் இருக்கும் உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்வி படிப்பதற்கான செலவு மிக மிக குறைவு. மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது என்பதால் இங்குள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அங்கு மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு எழுத வேண்டிய தேவையும் இல்லை.

இந்தியாவில் இருந்து 20,000 மாணவர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஏறத்தாழ 5000 மாணவர்களும் உக்ரைன் நாட்டில் படித்து வருகின்றனர். இதுதவிர பல்வேறு பணிகள், வர்த்தகத்துக்காக புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்திருந்த போதே கடந்த ஒரு வார காலமாக மத்திய அரசாங்கமும், அங்குள்ள இந்திய தூதரகமும் இந்தியர்களை நாடு திரும்புமாறு கூறியபோதும், போர் வருமா என்ற நிச்சயமற்ற நிலையில் யாரும் திரும்பி வராமல் இருந்து விட்டனர்.

இப்போது போர் மூண்ட நிலையில் எல்லோருமே பாதுகாப்பாக நாடு திரும்ப நினைக்கிறார்கள். உக்ரைன் அரசாங்கம் யாருமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம், தேவையான உணவு பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

விளக்கை அணைத்துவிடுங்கள் என்றெல்லாம் கூறுவது தமிழக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இங்குள்ள டிவியோடு தொடர்பு கொண்டு எங்கள் பெற்றோருக்கு நாங்கள் விடுக்கும் செய்தி நாங்கள் நலமாக இருக்கிறோம்.

பயப்படாதீர்கள் என்று கூறினாலும், அவர்கள் அனைவருமே நாங்கள் தமிழ்நாட்டுக்கு திரும்ப வேண்டும், தூதரகத்துக்கு செய்தி அனுப்புகிறோம், பதில் இல்லை என்கிறார்கள்.

பாதாள அறைகளிலும், சுரங்க மெட்ரோ நிலையங்களிலும் ஏராளமானவர்கள் தங்க வேண்டிய சூழ்நிலையில் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தவிப்பதை எடுத்து சொல்கிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு எல்லை பகுதியில் உள்ள ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கிறது.

உக்ரைன் ராணுவம் போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. மொத்தத்தில் எல்லோருமே போர் எப்போது முடியும் என்பதைத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img