fbpx
Homeதலையங்கம்சரியும் ரூபாய் மதிப்பும் அன்னிய செலாவணியும்!

சரியும் ரூபாய் மதிப்பும் அன்னிய செலாவணியும்!

இந்தியாவில் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களும் இதனையே சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர்.

குறிப்பாக, தொடர்ந்து அடிவாங்கும் பங்குச் சந்தைகள், ஜி.டி.பி வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சமீபத்தில் வரலாற்றில் முதல் முறையாக 83ஐ தாண்டியது.

இந்தாண்டு மட்டும் ரூபாய் மதிப்பு 10 &- 12 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்திய அரசு அதிக அளவு அன்னிய செலாவணியை கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதேவேளையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாகச் சரிந்துள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி தன்னிடம் இருந்த டாலர்களை விற்பனை செய்தது.

ரிசர்வ் வங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.85 பில்லியன் டாலர் குறைந்து 524.52 பில்லியன் டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது.

இது பொருளாதார விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான அன்னிய செலாவணியைச் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ரூபாய் மதிப்பு குறைவதை தடுக்க இயலவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியம்… கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மைக்கு விரைந்து மீட்டெடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img