fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.144 கோடியில் உப்பு நீரை நன்னீராக்கும் ஆலை ஆணையத் தலைவர் தகவல்

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.144 கோடியில் உப்பு நீரை நன்னீராக்கும் ஆலை ஆணையத் தலைவர் தகவல்

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு துறைமுக நிலையத்தில் ரூ.144 கோடி செலவில் 5 மில்லியன் லிட்டர் உப்புநீரை நன்னீராக்கும் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாரத பிரதமரின் “கதி சக்தி” திட்டம் குறித்து துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தலைமையில் பல்முனை போக்குவரத்து விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் கே.சக்கரவர்த்தி, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மூத்த வர்த்தக துணை மேலாளர் பிரசன்னா, தேசிய நெடுஞ்சாலை திட்ட டிஜிஎம் சங்கர், இந்திய துறைமுக ரயில் கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் கூட்டாக செய்தி யாளர்களை சந்தித்தனர்.

அப்போது வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறியதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அமைச்ச கங்களை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகளை உபயோகிப்பாளர்களுக்கு ஒற்றை சாளர முறையில் வழங்கப்படவுள்ளது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்களை கையாள முடியும்.
இதன் மூலம் துறைமுக ஆணையத்துக்கு 4.10 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளு வதற்கான கொள்முதல் உருவாக்கப்படும்.
பெரிய கப்பல்களை கையாள முடியும்

இந்த திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சரக்குப் பெட்டகங்கள் கொள்ளவுடைய பெரிய கப்பல்களை கையாள முடியும். பொது, தனியார் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம், அதிக வருவாய் ஈட்டுவதோடு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக 965 ஏக்கர் நிலப்பரப்பை வ.உ.சி. துறைமுகம் ஒதுக்கி உள்ளது. இதில் 745 ஏக்கர் நிலப்பரப்பு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. துறைமுக ஆணையத்துக்கு தேவையான தண்ணீரில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மூலம் 3 மில்லியன் லிட்டரை பெற்று வருகிறது. மேலும் வாழவல்லான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 750 கிலோ லிட்டர் குடிநீரையும், மங்களக்குறிச்சியில் உள்ள துறைமுகத்திற்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 1400 கிலோ லிட்டர் குடிநீரையும் பெற்று வருகிறது. 2025-ம் ஆண்டில் துறைமுகத்தின் தண்ணீர் தேவையானது 6.30 மில்லியன் லிட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு துறைமுக நிலையத்தில் ரூ.144 கோடி செலவில் 5 மில்லியன் லிட்டர் உப்புநீரை நன்னீராக்கும் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. ரயில் சரக்குப்பெட்டிகளில் உள்ளேயும், வெளியிலும் எடையை கண்காணிப்பதற்காக ரூ.23 லட்சம் செலவில் 140 மெட்ரிக் டன் மின்னணு ரயில் எடை பார்க்கும் செயலி துறைமுக ரயில் மார்செல்லிங் சேமிப்பு கிடங்கில் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் வருவாய் ஈட்டி தருவதோடு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img