fbpx
Homeதலையங்கம்ரஷ்யா - உக்ரைன் போர்: கவலையில் உலக மக்கள்!

ரஷ்யா – உக்ரைன் போர்: கவலையில் உலக மக்கள்!

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

இதையடுத்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டது. அதேவேளையில், உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக்கொள்ள விரும்பியது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வந்தது.

இந்த நிலையில் தான், இதோ, அதோ… என்று இன்று திடீரென உக்ரைன் மீது ரஷ்யா முழு பலத்தையும் பிரயோகித்துப் போரைத் தொடங்கி விட்டது. ரஷ்ய விமானங்கள் உக்ரைன் ராணுவ தளங்கள் மீது குண்டுமழை பொழிகின்றன.

எதிர்த் தாக்குதலில் 5 ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு விட்டனர். தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருவதால் கடும் சேதம் விளையும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையில் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்து உள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கினால் அது 3ம் உலகப் போருக்கு வழி வகுத்து விடும் என்று உலகமே அஞ்சுகிறது.

ஜெனிவாவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக் ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், “உக்ரைன் &- ரஷ்யா இடையே நடக்கும் போரின் விளைவுகள், உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்“ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் கவலை தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டத்தில் அவர் பேசும்போது, “போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே… மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வேண்டுகோளுக்கு ரஷ்யா செவி மடுக்காது என்பதே உண்மை. உக்ரைன் ராணுவ நிலைகள், தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ரஷ்ய அதிபர் தற்போது அறிவித்து இருக்கிறார்.

பொதுமக்கள் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படும் முன் போர் நிறுத்தப்பட வேண்டும் அல்லது போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

நல்ல முடிவு ஏற்படட்டும்!

படிக்க வேண்டும்

spot_img